நல்ல உஷ்ணமான காலங்களில் வெப்பமான காற்று உயரே எழும்புவதை நாம் எல்லாரும் கவனித்திருக்க முடியும். இதற்க்கு பெரிய அறிவியல் விளக்கம் கொடுக்க அவசியம் இல்லை என நினைக்கிறேன். இந்த சாதாரணமாக நிகழும் காரியத்தை நாம் எதிர்காலத்திற்கு பயன்படுத்தினால் என்ன என்று யோசித்ததின் விளைவு தான் இந்த ஆராய்ச்சி.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோஜெர் என்ற ஆரய்ச்சியாளர் இந்த செயலை மக்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார். இதன்படி அரிசோனா பாலைவனத்தில் 2600 அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரத்தை கட்ட திட்டமிட்டுள்ளார். அந்த கோபுரத்தின் உள் பகுதியில் 32 விசையாழிகள் ( Turbine ) பொருத்தப்பட்டிருக்கும். வெப்பமான காற்று கோபுரத்தின் உள் மேல் எழும்பும் போது விசையாழிகள் சுற்றப்படுவதால் இயந்திர ஆற்றல் உருவாக்கப்பட்டு மின் தோற்றிகள் ( Generators ) மூலம் மின் ஆற்றல் தயாரிக்கலாம் என இந்த ஆராய்ச்சி சொல்லுகிறது.
இந்த வெப்பக் காற்று கோபுரங்கள் மூலம் குறைந்தது 200 MWe மின்சாரம் தயாரிக்கமுடியும் என கூறுகிறது என்விரோ மிஷன் என்ற அவரது நிறுவனம். இந்த கோபுரம் கட்டப்பட்டால் உலகின் இரண்டாவது உயரமான அமைப்பு என்ற பெயரை பெறுவதுடன் , இதை கட்டி முடிக்க சுமார் 750 மில்லியன் டாலர் செலவாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
2600 அடி உயரமான ஒரு கோபுரத்தை பாலைவனத்தில் கட்டுவது ஒரு கடினமான காரியம் என்பதும் , இந்த திட்டம் இன்னும் ஆராய்ச்சி வடிவத்தில் தான் இருக்கிறது என்பதும் கூடுதல் தகவல். எப்போது இந்த திட்டம் செயல்படுப்படும் என்பது நமக்கு தெரியாவிட்டாலும் பசுமையான இந்த திட்டம் வரவேற்கப்பட வேண்டியது தான்.
நன்றி : CNN நியூஸ்
Innovative idea!
பதிலளிநீக்கு