சனி, அக்டோபர் 29, 2011

மழைகாலத்தில் ஒரு பாட்டி - ஒரு உண்மை சம்பவம்


காலை நேரம் .. வேகமாக பக்கத்துக்கு ஊருக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தேன் .  நல்ல மழைக்கு உபயோகபடுத்தும் கோட்டும் சூட்டும் போட்டுகொண்டு என் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டேன்.   மழைகாலமாய் இருந்தபடியால் ரோட்டில் வாகனங்கள் அதிகமில்லை .  இருப்பினும் சறுக்கி விடும் என்ற காரணத்தால் நானுன் வேகமாக செல்லவில்லை.

ஒரு நேரான ரோட்டில் செல்லும்போது , கொஞ்சம் வேகத்தை கூட்டினேன் .   ஹெல்மெட் அணிந்திருந்தாலும் போகும் வரும் ஜனங்களை பார்த்துகொண்டு பைக்கில் சென்றுகொண்டு இருந்தேன் .   தொலை தூரத்தில் ,  நடுரோட்டில் தலையில் சிறு சுமையுடன் யாரோ நடப்பது தெரிந்தது.   அருகில் ஊர் ஒன்றும் இல்லாதபோது ,  இந்த ரோட்டில் ,  இந்த மலையில் நடப்பது யார் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே எனது வாகனம் அவர்களை சமீபித்தது.
அருகில் சென்று உற்று நோக்கியபோது தான் கவனித்தேன் .  அது ஒரு பாட்டி என்று .   ஐயோ பாவம் ,  இவர்களை நாம் ஏன் வீட்டில் விடகூடாது என நான் நினைத்தபோது எனது வாகனம் கொஞ்சம் முன்னால் சென்றுவிட்டதை உணர்ந்தேன் .  எனது பைக்கை திருப்பிக்கொண்டு அவர்கள் அருகில் நிறுத்தினேன்.

பாட்டி என்று கூப்பிட்டேன் .   என்னை நிமிர்ந்து பார்த்தார்கள் .  ஒரு 70  வயது இருக்கும் .  நரைத்து போன முடிகள் மழைநீரில் ஒட்டிக்கிடந்தன.   கன்னங்கள் குழிவிழுந்து ,  சுருக்கத்தினால் முகம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்க ,  கைகள் மட்டும் நடுங்கி கொண்டேயிருந்தது.   மேலே என்ன சுமை என்று பார்த்தபோது கொஞ்சம் விளக்குமாறு ( Broom to Sweep )  கட்டு அவர்கள் தலையில் இருந்தது.    பாட்டி என் பைக்கில் ஏறுங்கள்.  உங்கள் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்று நான் கேட்டபோது என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்கள் ...  

அப்பா ...!  ஒரு விளக்குமாறு வாங்கிறாயா ...?   நான் சொன்னேன் "  பாட்டி  விளக்குமாறு வேண்டாம் ,  இந்த மழையில் நீங்கள் நடக்கவேண்டாம் , என் பைக்கில் ஏறுங்கள் ,  உங்கள் வீட்டில் விட்டுவிடுகிறேன் ".   பட்டி சொன்னார்கள் ,  "  அப்பா ... ஒரு விளக்குமாறு வாங்கிக்கொள் ..  தினமும் ஒரு விளகுமாறாவது விற்றால்தான் என்னால் சாப்பிடமுடியும் .  எங்க வீட்டுக்காரர் செத்துபோய் பல வருஷம் ஆச்சு ... பிள்ளை குட்டிங்க ஒன்னும் இல்லை .  இந்தா ...பக்கத்துக்கு ஊருக்கு போய் விளக்குமாறு விக்கத்தான் போனேன் .  ஆனா மழை பார்த்தியா ... ஒன்னு கூட விக்கலே ...  நான் கஞ்சி குடிச்சு ரெண்டு நாளாச்சு ... ஒரு விளக்குமாறு வாங்கிறியா...?
கொஞ்சம் அதிர்ந்தும் அதிகம் உடைந்தும் போனேன் .   பாட்டி வைத்திருந்த விளக்குமாறு வாங்கி எங்க வீட்டில் பயன்படுத்த முடியாததால் ,  பர்சை திறந்து கொஞ்சம் பணத்தை கொடுத்தேன் .   கொட்டும் மழையிலும் ,  வருத்திய பசியிலும்  பணம் வாங்க மறுத்த அவர்களை கொஞ்சம் கட்டாயப்படுத்தி அந்த பணத்தை அவர்கள் கையில் திணித்தேன் ...   

பணத்தை வாங்கி கொண்டு என்னை பார்த்து சொன்னார்கள் , " அப்பா ... உன் பிள்ளைங்க குட்டிங்க எல்லாம் ரொம்ப நாள் நல்லா இருக்கும் " .   மழைத் தண்ணீரோடு என் கண்ணில் நீர் வழிந்தததை அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை .   ஆனால் கடைசி வரை என் பைக்கில் ஏறவே இல்லை .  மழையோடும் சுமையோடும் நடந்து சென்ற அந்த பாட்டியை வெகுநேரம் மழையில் நனைந்தபடி பார்த்துக்கொண்டே இருந்தேன் .

 
வீட்டிற்கு வந்து தலையை துவட்டி விட்டு படுக்கையில் படுத்தபோதும்  இன்னும் அந்த பஞ்சுதலையும் , வெகுளி பேச்சும் , ஏங்கிய கண்களும் என் கண்களுக்கு முன்பாக இருந்துகொண்டேயிருக்கிறது.   அந்த பாட்டி எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் நான் கேட்க மறந்து விட்டேன் .   கடவுளே ....! எப்படியாவது அந்த பாட்டியை கடைசிவரையும் காப்பாற்றும் என வேண்டிக்கொள்ள தான் என்னால் முடிந்தது.


உலகின் மிக நீண்ட நீச்சல் குளம் - இன்று ஒரு தகவல்


நீச்சல் குளங்களை குறித்து அறியாத யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது.   நகரங்களில் இந்த நீச்சல் குளங்கள் செயற்கையாக கட்டப்பட்டும்  . கிராமங்களில் இந்த நீச்சல் குளங்கள் இயற்கையாக ( அதாங்க நம்ம ஊரு குளம் .. ஹி ஹி ) அமைந்தும் உள்ளது.  இந்த நிலையில்  இந்த உலகின் மிக நீண்ட நீச்சல் குளத்தை ஜெர்மனியில் கட்டுவதற்கு Realitties : United என்ற நிறுவனம் வடிவமைப்பை தயார் செய்துள்ளது.  
 
 
 
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் ஓடும் Spree என்ற நதியில் தான் இந்த பெரிய நீச்சல் குளம் கட்டப்பட போகிறது .  இந்த நீச்சல் குளத்தின் நீளம் 745 மீட்டர் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  17  ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் மொத்த நீளத்தை விட இது அதிகமாகும். 
 
3.9  ஹெக்டேர் நிலப்பரப்பில் அமையும் இந்த பெரிய நீச்சல் குளத்தின் தண்ணீரானது நீச்சல் குளத்தின் ஆரம்பத்தில் 1 . 8  ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் நாணல் படுகையினால் வடிகட்டப்பட்டு நீச்சல் குளத்தினுள் அனுமதிக்கப்படும்.   நீச்சல் குளத்தின் பின் பகுதியில் குறுக்காக ஒரு அணை கட்டப்பட்டு சுத்திகரிக்கப்படாத நீர் பின்னால் நீச்சல் குளத்திற்குள் வராமல் தடுக்கப்படும்.
 
 
 
ஆற்றங்கரையின் பல பகுதிகளில் இதற்காக படிகள் அமைக்கப்பட்டு , தோட்டங்கள் , பூங்காக்கள் , உடை மாற்றும் அறைகள் அமைக்கப்படுவதினால் ஜெர்மன் மக்கள் அநேகர் இந்த நீச்சல் குளத்திற்கு படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த திட்டம் மிலன் நகரில் நடந்த மூன்றாவது  உலகளாவிய  ஹல்சியம் அவார்ட்ஸ் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல் . 
 
டிஸ்கி :  அட நல்லா இருக்கே ... அப்படியே எங்க ஊரு கூவம் ஆற்றையும் இப்படி மாற்ற முடியுமான்னு கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது.   நண்பர்களே உங்களால முடிந்தால் நீங்கள் கூட செய்யலாமே ..!.
 
 

வெள்ளி, அக்டோபர் 28, 2011

பறக்கும் விமானதளம் - இது ஒரு வருங்கால திட்டம்


விமானங்கள் இல்லாத ஒரு காலத்தை நம்மால் யோசித்து கூட பார்க்கமுடியாத சூழலில் நாம் இருக்கிறோம் .    சென்னையில் Breakfast ,  டெல்லியில் Lunch  , கல்கத்தாவில் Dinner , இதெல்லாம் சாத்தியமா என்றால் ,  விமானத்தின் மூலம் சாத்தியம் என்று தான் சொல்ல தோன்றுகிறது.   உலகம் முழுவதும் இதற்காக பல விமானதளங்களும் ( Airport ) ,  லட்சகணக்கான விமானங்களும் இயங்கி வருகின்றன.   இந்த சூழலில் , இன்னும் பெருகி வரும் விமான தேவையை சந்திப்பதற்கு என்ன செய்யலாம் என்று நினைத்ததின் விளைவு தான் இந்த பறக்கும் விமானதளம் . 



Airborne Metro என்று அழைக்கப்படும் இந்த விமானதளம்  ஒரு பெரிய பறக்கும் விமானம் தான் .   ஆமா ... இந்த விமானம் பறந்து கொண்டு  இருக்கும் போது , பிற குட்டி விமானங்கள் இந்த விமானத்தில் வந்து இறங்கி பின் பிரயாணிகளை என்று கொண்டு பறந்து போகும் .  உதாரனத்திற்க்கு  , நாம் இப்பொழுது அமெரிக்கா போகவேண்டுமெனில் சிலவேளை Honkong போய் வேறு விமானத்தில் ஏறவேண்டும் .   ஆனால் அப்படி இன்னும் ஒரு விமானதளத்தில் நாம் இறங்குவதற்கு பதில் நமது விமானம் இந்த பறக்கும் விமானதளத்தில் இறங்கும் .  அதில் கொஞ்ச நேரம் பயணம் செய்தபிறகு அங்கிருந்து வேறு விமானம் நம்மை நாம் விரும்பும் இடத்திற்கு கொண்டு போகும் . 

Airborne Metro என்று அழைக்கப்படும்  இந்த பறக்கும் விமானதளத்தில் கிட்டத்தட்ட 3000  பேர் பயணிக்கும்  / தங்கியிருக்கும் வசதியும் குட்டி விமானங்கள் இறங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கும் .

இவ்வளவு  பெரிய விமானம் தரை இறங்கி பின் ஆகாயத்தில் பறக்க வேண்டுமானால் சந்தேகமில்லாமல் அதற்க்கு ஆகும் எரிபொருள் தேவை மிக அதிகம் .   அதனால் இந்த விமானத்தின் எரிபொருள் தேவையை அணுசக்தியின்  மூலம் சந்திக்கவும்  ,  தொடர்ந்து வானத்தில் பறந்து கொண்டேயிருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.   இதன் மூலம் 600 மைல் பிரயாணம் செய்தால் 40  சதவீதம் எரிபொருளும்  , 6000  மைல் பயணம் செய்தால் 80 சதவீதம் எரிபொருளும் சேமிக்கப்படும் என்கின்றனர் இதை வடிவமைத்த பொறியியல் வல்லுனர்கள் ....

டிஸ்கி  :  அட என்னவெல்லாம் யோசிக்கிறாங்க ..... நல்லாத்தான் இருக்கு  .... வருங்காலங்களில் நெருக்கடியை சமாளிக்க இந்த மாதிரி திட்டங்கள் தேவை தான்


நன்றி : தி ஏவியேசன் வீக்


வியாழன், அக்டோபர் 27, 2011

சக்கரங்களின் மேல் ஒரு அரண்மனை - ஒரு சுற்றுலா தகவல்


Palace On Wheels என அழைக்கப்படும் சொகுசு சுற்றுலா தொடர்வண்டியை  ( Luxury Tourism Train )  குறித்து இந்த கட்டுரையில் நாம் காண்போம் .   இந்த தொடர்வண்டி இந்திய ரயில்வே துறையால் ராஜஸ்தான் மாநிலத்தின் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும்பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சொகுசு தொடர்வண்டியாகும் .   1982 ம் வருடம் ஜனவரி மாதம் 26 ம் தேதி இந்த சொகுசு தொடர்வண்டியின் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 


 1990 ம் ஆண்டு முழுவதும் குளிர்சாதன வசதியுடன் மாற்றப்பட்ட இந்த சொகுசு தொடர்வண்டி 13 பெட்டிகள்,  2 உணவகங்கள் , 1  பார் மற்றும் 4  சேவை பெட்டிகளுடன் மீட்டர் காஜ் தண்டவாளத்தில் வளம் வந்தது.  பின்னர்  1995 ம் வருடம் முழுவதும் மாற்றப்பட்ட 14 பெட்டிகள்  , 2 உணவகங்கள் , 1 பார் மற்றும் 4 சேவை பெட்டிகளுடன்  அகல இருப்புப்பாதையில் தன் பயணத்தை தொடர்கிறது.  



ஒவ்வொரு பெட்டிகளும் 4  தூங்கும் அறைகள் உள்ளதை உள்ளது .  தூங்கும் அறைகள் நன்கு அலங்கரிக்கப்பட்ட பர்னிச்சர்கள் ,  ஓவியங்கள் , மற்றும் கைவேலை பொருட்களை கொண்டுள்ளது .  ஒவ்வொரு அறைக்கும் கழிப்பிட வசதி இணைக்கப்பட்டுள்ளது.   இந்த 14  பெட்டிகளும்  ராஜஸ்தான் மாநிலத்தின் 14 முக்கிய இடங்களின் பெயர்களால் ( Alwar, Bharatpur, Bikaner, Bundi, Dholpur, Dungarpur, Jaipur, Jaisalmer, Jhalawar, Jodhpur, Kishangarh, Kota, Sirohi, and Udaipur. ) அழைக்கப்படுகிறது .   


மிக அழகான ,  சுத்தமான ,  சுவை தரும் உணவுகள் கிடைக்கும் 2 உணவகங்கள் ( பெயர்கள் :  மகாராஜா மற்றும் மகாராணி )   இந்த சொகுசு தொடர்வண்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது.    டெல்லியில் இருந்து புறப்படும் இந்த தொடர்வண்டி  ஜெய்ப்பூர்  , ஜெய்சல்மர் ,  ஜோட்ப்பூர் ,   சவாய் மதிபூர் ,  உதய்ப்பூர் , பரத்ப்பூர் , மற்றும் ஆக்ரா வரை சுற்றியோடுகிறது ...


இந்த தொடர்வண்டியில் பயணிக்கும் அனுபவமும்  , அது சுற்றியோடுகிற இடங்களில் கிடைக்கும் பயண அனுபவங்களும் வாழ்வில் மறக்கமுடியாதவை என்றால் அது மிகையாகாது .  



கருவில் கலையும் கனவுகள்

இப்போதெல்லாம் கண்ணை மூடினாலே ...

கனவுகள் தான்....

நினைவுகள் எல்லாம் ...

நிஜமாக போகிற உற்சாகம் ......



                இன்னும் மாதம் எட்டு தான்...

                சூழ்ந்துள்ள இருட்டில் இருந்து

               விடுதலை....

               புது வாழ்வின் புத்தொளி நோக்கி

               பூத்திருக்கும் கண்கள்....



அன்னையின் முகம் ....

ஹா... நினைத்தாலே சுகமல்லோ.....!

தந்தையின் பரிவு.....

ஏதுண்டு இதற்கிணை....!


              கற்பனை குதிரை

              தறிகெட்டு ஓட....

             வானோர் எல்லாம்

             வாழ்த்துவது போலவும் ............

             பூலோகத்தார் எல்லாம்

            புகழுவது போலவும் .........

            சிறந்த பெண்ணை பெற்றதால்

            பூரிக்கும் பெற்றோரை ...

           பூக்களின் மத்தியில்

           கண்டது போலவும்...


எதையோ சாதித்த


மகிழ்வு......


          ஆ... என்ன இது.....?


          கூர்மையான பற்கள் ....

          அம்மா ...

         என்னை காப்பாற்று ...

         என்னை குத்துகின்றன .....

        ஆ ... என் கை....

         அம்மா......! ஆ.. ஆ....


வெளி உலகை பாராமல்


கருவில் கலைந்தது ...

என் கனவு மட்டுமல்ல ...

என் வாழ்வும் தான்.....



(கருவில் அழிக்கப்பட்ட ஒரு சிறுமி )


நண்பர்களே .....




சிசு கொலைக்கு எதிராக நீங்களும் உங்கள் கருத்துகளை பகிரலாமே.....!

புதன், அக்டோபர் 26, 2011

அமெரிக்கா ரஷ்யா இடையில் சுரங்க ரயில் பாதை - இன்று ஒரு தகவல்


அமெரிக்கா , ரஷ்யா  இரண்டு நாடுகளும் மிக மிக முக்கியமான நாடுகளாய் உலக அரசியலில் திகழ்ந்தவை மற்றும் திகழ்ந்து கொண்டு இருப்பவை .    இந்த நிலையில் ரஷ்யாவின் சைபீரியா பகுதியையும் அமெரிக்காவின் வடக்கு பகுதியான அலாஸ்காவையும் ரயில் பாதைகளில் இணைக்கும் மாபெரும் திட்டத்தை ரஷ்யா அரசு அறிவித்துள்ளது.  


இந்த இரண்டு கண்டங்களையும் இணைக்கும் மகத்தான திட்டம் 65 மைல் கொண்ட பெரிய சுரங்க பாதையை Bering Straight என்ற பகுதியில் கொண்டுள்ளது.  இந்த சுரங்கபாதை  England மற்றும் France யை இணைக்கும் Chunnel சுரங்கத்தை விட இரு மடங்கு நீளமுடையது.    மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தில் சுரங்க பாதைக்கு மாத்திரம் 10 - 12 பில்லியன் டாலர் ஆகும் எனவும் மொத்த ரயில்வே பாதையும் ஏற்ப்படுத்த 65 மில்லியன் டாலர் ஆகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.  

இந்த மாபெரும் பாதையில் அலையில் இருந்தும் காற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான் ஆலைகள் நிறுவப்படும் எனவும் அதன் மூலம் 10 ஜிகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படும் எனவும் தெரிகிறது.  


வருடத்திற்கு 100 மில்லியன் டன் சரக்குகள் இந்த பாதையின் மூலம் அனுப்பப்படும் எனவும் பல லட்சம் பேர் இதி பிரயாணம் செய்வார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.   ஆசியாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் இந்த ரயில் பாதை கட்டிமுடிக்க 15 வருடங்கள் ஆகுமாம்.

நன்றி :  Times on Line



செவ்வாய், அக்டோபர் 25, 2011

உலகின் அதிவேக விமானங்கள் - ஒரு அதிவேக பார்வை


விமானங்கள் என்றாலே அதிவேகமாக பறக்கும் சக்தி கொண்டவை என்பது நம் எல்லாருக்கும் நன்கு தெரியும் .    உலகின் அதிவேகமான விமானங்களை குறித்த தகவலை நாம் காண்போமே ...! 
5 வது இடம்   :   MIG 25 -  FOX BAT  




ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் அதிகபட்ச உயரமாக 80000 அடி வரை பறக்கும் சக்தி படைத்தது.   இதனுடைய அதிகபட்ச வேகம்  3.2  மாக் .   இரண்டு Tumansky R-15B-300 இஞ்சின்கள் இந்த விமானத்தின் சக்திக்கு காரணம் .  


4 வது இடம்   :   SR-71 BlackBird


 U  -  2  என்ற விமானத்தின் மேம்பட்ட விமானமாக இந்த விமானம் 1960 ல் அமெரிக்காவில் வடிவைக்கப்பட்டது.    இது அதிகபட்சம் 100000 அடி உயரம் வரை பறக்கும் சக்தி படைத்தது.   இதனுடைய அதிகபட்ச வேகம்   சுமார் 3.5  மாக் .    40  வருடங்களாக அமெரிக்க விமான படையில் பணியாற்றிய இந்த ரக விமானங்கள் 1998 ல் ஒய்வு பெற்றது .

3 வது இடம்  :  X-15   :


உலகின் மூன்றாவது அதிவேக விமானம் இது .  இது அதிகபட்சம் சுமார் 354330 அடி வரை பார்க்கும் சக்தி கொண்டது.   இதனுடைய அதிகபட்ச வேகம் சுமார்  6. 72 மாக்.     நீர்ம ஆக்சிசனை எரிபொருளாக பயன்படுத்தும் இரண்டு Thiokol XLR99-RM-2 இஞ்சின்கள் இதற்க்கு சக்தி கொடுக்கின்றன .  இந்த விமானம் ஓன்று தயாரிக்க சுமார் 300 மில்லியன் டாலர் செலவாகுமாம்.   இதுவும் அமெரிக்காவின் படைப்புதான் 


2 வது இடம்  :   X-43A   

அமெரிக்காவின்  நாசா விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது இந்த விமானம் .   ஹைபர்சானிக் வகையை சேர்ந்த இந்த விமானத்தின் அதிகபட்ச வேகம் சுமார் 9.8  மாக் .    நீர்ம ஹைட்ரசனை எரிபொருளாக கொண்டு இயங்கும் இன்ஜின்களை கொண்டுள்ளது.   
முதல் இடம் -   விண்வெளி ஓடங்கள்  :  





விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஆற்றல் கொண்ட இந்த விமானங்கள் சக்தி வாய்ந்த இஞ்சின்கள் மற்றும் ராக்கெட் பூஷ்டர்களை கொண்டு இயக்கப்படுகிறது.   இதனுடைய அதிகபட்ச வேகம் 20 மாக் 

டிஸ்கி :  இப்பொழுது நிறைய பேருக்கு மாக் என்றால் என்ன என்று தோன்றுகிறது .  மாக்  =   பறக்கும் பொருளின் வேகம்  / காற்றில் ஒலியின் வேகம் .    இந்த விமானங்களை விட வேகமாக பறக்கும் ஒரு காரியம் இருக்கிறது.   அதனுடைய வேகம் 100  மாக் என வைத்துக்கொள்ளுங்கள்.   அப்படியா ..?    அட ஆமாங்க ... அதான் நம்ம கற்பனை .....   கற்பனை குதிரையை தட்டிவிடுங்க..... ஒரு செகண்ட்ல இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு போகலாம் .   ஹ ...ஹா. .. 


திங்கள், அக்டோபர் 24, 2011

விண்வெளியில் எரிபொருள் நிரப்பும் திட்டம் - நாசா


தற்பொழுது பல நாடுகளும் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை ஏவி பல செயற்கை கோள்களை செலுத்தி வருகின்றனர்.  அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் விண்வெளிக்கு மனிதனை ஏற்றி சென்று பின் திரும்ப கொண்டு வரும் விண்கலங்களை தயாரித்து இருக்கிறது.  ஆனால் இப்படி ஏவப்படும் விண்கலங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை மட்டும் செல்லும் சக்தி படைத்தவை.   ஏன் எனில் அவைகள் பயணிக்கும் தூரத்திற்கு ( போக , வர ) தேவையான எரிபொருளின் அளவை பொருத்து அந்த விண்கலத்தின் எடையும் அதிகரிக்கும் .   இந்த குறைபாட்டை நிவிர்த்தி செய்தால் தான் இன்னும் பல மடங்கு தூரத்திற்கு ( செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு ) மனிதனை அனுப்ப முடியும் என்று நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் யோசித்ததின் விளைவு தான் இந்த விண்வெளியில் எரிபொருள் நிரப்பும் திட்டம்






நடுவானில் எரிபொருள் நிரப்ப பயன்படும் இந்த கொள்கலனை நாசா Propellant depots என்று அழைக்கிறது.  இதன் மூலம் பூமியின் சுற்று பாதைக்கு வெளியில் எரிபொருள் நிரப்பும் வசதி கிடைப்பதால் , தொலை தூரத்திற்கு மனிதனை அனுப்ப முடியும் என்று நாசா திட்டமாய் எண்ணுகிறது.   கடந்த ஆறு மாதங்களாக இந்த திட்டத்தை குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் அடுத்த மாதம் கூடி இதை முடிவு செய்ய உள்ளதாக தெரிகிறது.  

2030 ம் வருடம் வரை இந்த திட்டம் செயல்பட சாத்தியம் இல்லை என்ற போதிலும் 2012 ம் வருடத்தில் இருந்து 2030 ம் வருடம் வரை 60 பில்லியன் டாலரில் இருந்து 80 பில்லியன் டாலர் வரை ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.   

இந்த மாதிரி எரிபொருளை ( நீர்ம ஆக்சிஜென் மற்றும் நீர்ம நைட்ரஜென் ) விண்வெளியில் கொள்கலனில் பாதுகாப்பது மிகவும் எளிதான காரியம் அல்ல .  ஏன் எனில் இந்த எரிபொருட்கள் குளிர்ந்த சூழலில் தான் பாதுகாக்கப்பட வேண்டும் .   ஆனாலும் ஆராய்சியின் முடிவுகளும் ,  முயற்சிகளும் என்ன தான் சொல்லுகிறது என்பதை நாம் பொறுத்திருந்து காண்போமே ...

Source : The Newyork Times 


ஞாயிறு, அக்டோபர் 23, 2011

மேகங்களோடு பறக்கலாம் - செயற்கை மேகத்தில் - இன்று ஒரு தகவல்


சில நாட்களில் வானத்தை அண்ணாந்து பார்த்தால் கூட்டம் கூட்டமாக செல்லும் மேகங்களின் அழகை வார்த்தை கொண்டு வர்ணிக்க இயலாது .   அப்படிப்பட்ட மேகங்களின் மீது TOM  & JERRY பயணிக்கும் காட்சியை அடிக்கடி Cartoon தொலைக்கட்சியில் பார்க்கவும் செய்திருக்கிறேன்.   அப்படி பட்ட மேகங்களின் மேல் இன்னொரு செயற்கை மேகம் செய்து அதில் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தார் நியூயார்க் யை சேர்ந்த Tiago Baarros என்ற வடிவமைப்பாளர் .  அதனுடைய தொடர்ச்சிதான் இந்த சாதனை திட்டம் 



Passing cloud என்று இந்த செயற்கை மேகத்திற்கு பெயர் இடப்பட்டுள்ளதாம்.   கடின உழைப்பு கொண்ட பலூன்கள் பலவற்றின் தொகுப்பு நாள் Stainless Steel முலாம் கொண்டு இந்த செயற்கை மேகம் உருவாக்கப்ப்படுமாம்.   இந்த திட்டத்தை வடிவமைத்தவர் மேகங்களின் மேல் நாம் செல்லும் உணர்வு நமக்கு உண்டாக வேண்டும் என்பதற்காக அதில் ஒரு ஏணியை பொருத்தும் திட்டமும் உள்ளதாம் .  அதனால் அதில் பயணிப்பவர்கள் இந்த செயற்கை மேகத்தின் மேல் ஏறி அந்த உணரவை பெறலாமாம்.  ( அட .. )

இது இப்பொழுது தான் ஆராய்ச்சி கட்டுரையாக  life at the Speed Of the Rail என்ற பன்னாட்டு போட்டியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாம் .   இதில் இன்னும் ஒரு முக்கியமான விடயம் .. இந்த செயற்கை மேகம் காற்று அடிக்கும் திசையில் அது பாட்டுக்கு போய கொண்டே இருக்குமாம் .   அய்யோடா ...

டிஸ்கி :  இப்ப யாரோ நினைக்கிறாங்க ,  வரட்டும் இந்த திட்டம் ... உனக்கு ஒரு டிக்கெட்ட வாங்கி அப்படியே காற்றோட போ என்று அனுப்பி விட்டுட்டு தான் வேற வேலை அப்படின்னு ....   சாமி நான் தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க ....