காலை நேரம் .. வேகமாக பக்கத்துக்கு ஊருக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தேன் . நல்ல மழைக்கு உபயோகபடுத்தும் கோட்டும் சூட்டும் போட்டுகொண்டு என் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டேன். மழைகாலமாய் இருந்தபடியால் ரோட்டில் வாகனங்கள் அதிகமில்லை . இருப்பினும் சறுக்கி விடும் என்ற காரணத்தால் நானுன் வேகமாக செல்லவில்லை.
ஒரு நேரான ரோட்டில் செல்லும்போது , கொஞ்சம் வேகத்தை கூட்டினேன் . ஹெல்மெட் அணிந்திருந்தாலும் போகும் வரும் ஜனங்களை பார்த்துகொண்டு பைக்கில் சென்றுகொண்டு இருந்தேன் . தொலை தூரத்தில் , நடுரோட்டில் தலையில் சிறு சுமையுடன் யாரோ நடப்பது தெரிந்தது. அருகில் ஊர் ஒன்றும் இல்லாதபோது , இந்த ரோட்டில் , இந்த மலையில் நடப்பது யார் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே எனது வாகனம் அவர்களை சமீபித்தது.
அருகில் சென்று உற்று நோக்கியபோது தான் கவனித்தேன் . அது ஒரு பாட்டி என்று . ஐயோ பாவம் , இவர்களை நாம் ஏன் வீட்டில் விடகூடாது என நான் நினைத்தபோது எனது வாகனம் கொஞ்சம் முன்னால் சென்றுவிட்டதை உணர்ந்தேன் . எனது பைக்கை திருப்பிக்கொண்டு அவர்கள் அருகில் நிறுத்தினேன்.
பாட்டி என்று கூப்பிட்டேன் . என்னை நிமிர்ந்து பார்த்தார்கள் . ஒரு 70 வயது இருக்கும் . நரைத்து போன முடிகள் மழைநீரில் ஒட்டிக்கிடந்தன. கன்னங்கள் குழிவிழுந்து , சுருக்கத்தினால் முகம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்க , கைகள் மட்டும் நடுங்கி கொண்டேயிருந்தது. மேலே என்ன சுமை என்று பார்த்தபோது கொஞ்சம் விளக்குமாறு ( Broom to Sweep ) கட்டு அவர்கள் தலையில் இருந்தது. பாட்டி என் பைக்கில் ஏறுங்கள். உங்கள் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன் என்று நான் கேட்டபோது என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்கள் ...
அப்பா ...! ஒரு விளக்குமாறு வாங்கிறாயா ...? நான் சொன்னேன் " பாட்டி விளக்குமாறு வேண்டாம் , இந்த மழையில் நீங்கள் நடக்கவேண்டாம் , என் பைக்கில் ஏறுங்கள் , உங்கள் வீட்டில் விட்டுவிடுகிறேன் ". பட்டி சொன்னார்கள் , " அப்பா ... ஒரு விளக்குமாறு வாங்கிக்கொள் .. தினமும் ஒரு விளகுமாறாவது விற்றால்தான் என்னால் சாப்பிடமுடியும் . எங்க வீட்டுக்காரர் செத்துபோய் பல வருஷம் ஆச்சு ... பிள்ளை குட்டிங்க ஒன்னும் இல்லை . இந்தா ...பக்கத்துக்கு ஊருக்கு போய் விளக்குமாறு விக்கத்தான் போனேன் . ஆனா மழை பார்த்தியா ... ஒன்னு கூட விக்கலே ... நான் கஞ்சி குடிச்சு ரெண்டு நாளாச்சு ... ஒரு விளக்குமாறு வாங்கிறியா...?
கொஞ்சம் அதிர்ந்தும் அதிகம் உடைந்தும் போனேன் . பாட்டி வைத்திருந்த விளக்குமாறு வாங்கி எங்க வீட்டில் பயன்படுத்த முடியாததால் , பர்சை திறந்து கொஞ்சம் பணத்தை கொடுத்தேன் . கொட்டும் மழையிலும் , வருத்திய பசியிலும் பணம் வாங்க மறுத்த அவர்களை கொஞ்சம் கட்டாயப்படுத்தி அந்த பணத்தை அவர்கள் கையில் திணித்தேன் ...
பணத்தை வாங்கி கொண்டு என்னை பார்த்து சொன்னார்கள் , " அப்பா ... உன் பிள்ளைங்க குட்டிங்க எல்லாம் ரொம்ப நாள் நல்லா இருக்கும் " . மழைத் தண்ணீரோடு என் கண்ணில் நீர் வழிந்தததை அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை . ஆனால் கடைசி வரை என் பைக்கில் ஏறவே இல்லை . மழையோடும் சுமையோடும் நடந்து சென்ற அந்த பாட்டியை வெகுநேரம் மழையில் நனைந்தபடி பார்த்துக்கொண்டே இருந்தேன் .
வீட்டிற்கு வந்து தலையை துவட்டி விட்டு படுக்கையில் படுத்தபோதும் இன்னும் அந்த பஞ்சுதலையும் , வெகுளி பேச்சும் , ஏங்கிய கண்களும் என் கண்களுக்கு முன்பாக இருந்துகொண்டேயிருக்கிறது. அந்த பாட்டி எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் நான் கேட்க மறந்து விட்டேன் . கடவுளே ....! எப்படியாவது அந்த பாட்டியை கடைசிவரையும் காப்பாற்றும் என வேண்டிக்கொள்ள தான் என்னால் முடிந்தது.