சனி, அக்டோபர் 22, 2011

நடந்தால் போதும் மின்சாரம் கிடைக்கும் - இன்று ஒரு தகவல்


மின்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.   அந்தளவுக்கு நம்முடைய அன்றாட தேவைகளில் மின்சாரம் முதல் இடம் பிடித்துள்ளது.   அதனால் தான் பல வழிகளிலும் மின்சாரத்தை உருவாக்க பலர் முயன்று கொண்டு இருக்கிறார்கள்.   அனல் மின்சாரம் ,  அணுமின்சாரம் ,  காற்றில் இருந்து ,  அலையில் இருந்து ,  நீரில் இருந்து ,  சூரிய ஒளியில் இருந்து ,   கழிவுகளில் இருந்து இப்படி பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்க ,  தற்பொழுது " நீங்கள் நடந்தால் போதும் ,  மின்சாரம் கிடைக்கும் "  என்று மின்சாரம் தயாரிக்கும் Tiles  கண்டுபிடித்திருக்கிறார் லாரென்ஸ் என்ற ஆய்வாளர்.   அட ...!


அதிகமாக மக்கள் கடக்கும் சாலை பகுதிகளில் இந்த Tiles பதிக்கப்படும் எனவும் ,   மக்கள் இந்த Tiles  மேல்  ஏறிப்போவதினால்  உண்டாகும்  இயக்க  ஆற்றல்  மின்சார ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர் சொல்லுகிறார்.    சாலை ஓரங்களில் பதிக்கப்படும் இந்த Tiles கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 2 .  1   வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அந்த மின்சாரத்தை சாலை ஓரங்களில் இருக்கும் விளக்குகளுக்கு பயன்படுத்தலாம் என சொல்லுகிறார் இவர்.
 
 
100  சதவீத மறு சுழற்சி செய்ய முடிகிற மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த Tiles 5  வருடங்களுக்கு கிட்ட தட்ட 20 மில்லியன் மிதிகளை ( நமது அடிகள் ) வாங்கி கொள்ளும் சக்தி படைத்தது.   இந்த மின்சாரத்தை சிறிய லித்தியம் பாட்டரிகளில் சேமிக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.  
 
தற்பொழுது கிழக்கு லண்டனில் சோதனையில் இருக்கும் இந்த கண்டுபிடிப்பு 2012 ல்  லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் மைதானத்தையும்   Westfield Stratford City   ஷாப்பிங் பகுதியையும் இணைக்கும் சாலை பகுதியில் பொருத்தப்படும்  என தெரிகிறது.  
 
டிஸ்கி :   என்ன எல்லாம் கண்டுபிடிக்கிறாங்க .!....  வெரி குட் ... ஆமா கண்ணாலே பார்த்தாலே மின்சாரம் கிடைக்குமா ?  அப்படின்னு கேள்வி கேட்டுகிட்டு நிறைய நேரம் கணிப்பொறியை பார்க்காதீங்க .... கண்ணு கேட்டு போய் விடும் .  
 
 
 
 

வியாழன், அக்டோபர் 20, 2011

பிளாஸ்டிக்கை எண்ணையாக மாற்றுமா ? - ஒரு கண்டுபிடிப்பின் தகவல்


பிளாஸ்டிக் இல்லாத இன்றைய உலகை நாம் நினைத்து கூட பார்க்க முடியவில்லை .   ஆனால் அதே நேரம் பிளாஸ்டிக் பொருட்களினால் உண்டாகும் சுற்றுசூழல் சீர்கேட்டையும் நாம் அறிந்திருக்கிறோம்.   தற்பொழுது பல இடங்களில் மக்க கூடாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தும்  ,  மற்ற பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்தும் வருகிறோம் .   இந்த நிலையில் தான் பிளாஸ்டிக் பொருட்களை எண்ணையாக ( எரிபொருளாக )  மாற்றும் தொழினுட்பத்தை கண்டுபிடித்துள்ளார் ஜப்பானை சேர்ந்த அகிநோரி இடோ என்ற ஆராய்ச்சியாளர்.
 
 
 
 
இவர் கண்டுபிடித்துள்ள இந்த சாதனத்தின் கொள்கலனில் பிளாஸ்டிக் பொருட்களை போட்டு நன்கு அதை மூடின பிறகு ,   மின்சாரத்தின் துணை கொண்டு அந்த பிளாஸ்டிக் பொருட்கள் உருக வைக்கப்படுகிறது.   அப்பொழுது வெளியேறும் வாயு ஒரு சிறிய குழாயின் மூலம் சேகரிக்கப்பட்டு ,  பின் அந்த வாயு தண்ணீர் உள்ள ஒரு கொள்கலனுக்குள் செலுத்தப்படுகிறது.   அப்படி செலுத்தப்படும் அந்த வாயு தண்ணீரினால் குளிர்விக்கப்பட்டு எண்ணையாக மாறுகிறது.   இந்த எண்ணையை நாம் எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
 
 
ஒரு கிலோகிராம்  பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ஒரு லிட்டர் எண்ணெய் தயாரிக்க முடியும் எனவும் அதற்கு ஒரு கிலோ  வாட்  மின்சாரம்  தேவைப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    இந்த கண்டுபிடிப்பின் மூலம் சுற்று சூழல் பெரிதும் பாதுகாக்கப் படுவதுடன் நமக்கு தேவையான எரிபொருளை ( எண்ணையை ) நாமே தயாரிக்கலாம் என பெருமையுடன் கூறுகிறார் இதை கண்டுபிடித்த அகிநோரி இடோ  . 


நன்றி : AKIHABARA NEWS
 
டிஸ்கி :  நல்ல ஒரு கண்டுபிடிப்பு ... அகிநோரி ஜி உங்களுக்கு ஒரு சலாம்.   அப்படியே சமையல் செய்யும் எரிவாயு பிளாஸ்டிக்கில் இருந்து கிடைக்குமா பாருங்கள் ...   நாங்க எல்லாம் ரொம்ப சந்தோசப்படுவோம்.

புதன், அக்டோபர் 19, 2011

20 ம் நூற்றாண்டின் மிக பயங்கர வைரஸ்கள் - இன்று ஒரு தகவல்


20 ம் நூற்றாண்டில் மிக பயங்கர வைரஸ் தாக்குதல்கள் உலகம் முழுவதும் நடைபெற்றன.   பயந்துவிடாதீர்கள் கம்ப்யூட்டர் வைரஸ்  தான்.   ஆம் கணிப்பொறியின் தகவல்களை அழிக்கும் வகையில் எழுதப்பட்ட கணிப்பொறி நிரல் ( Computer Program ) தான் வைரஸ் என்று அழைக்கபடுகிறது.   20  நூற்றாண்டின் கணிப்பொறிகள் சில மோசமான வைரஸ்களை சந்தித்து இருந்தாலும் (  ஜெருசலேம் 1987  , Morris  1988 ,   Barrotes 1993  , Solar Sunrise 1998 ) ,  அதிக சேதங்களை உண்டாகிய இரண்டு வைரஸ்களை இந்த பதிவில் காண்போம்.

Melissa 1999  :   இந்த வைரஸ் விளைவித்த சேதம் 300  - 600  மில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.    மார்ச் 26  , 1999  தான் இதன் பிறந்த நாள் ( அன்று தான் இதை வைரஸ் என்று கண்டுபிடித்தார்கள்) .   இந்த உலகத்தில் உள்ள 15  -  20  சதவீத கணிப்பொறிகளை இது சேதப்படுத்தியது.   மைக்ரோசாப்ட் outlook  பயன்படுத்தி மின் அஞ்சல் அனுப்பும் கணிப்பொறிகளை தாக்கும் இவை தானாகவே 50  பேருக்கு மேல் ஒரு கணிப்பொறியில் இருந்து செய்திகளை அனுப்பியது.   " இது உங்களுக்கான தகவல் ,  வேறு ஒருவரிடமும் சொல்லாதீர்கள்"  என்ற தகவலுடன் வந்த இந்த வைரஸ் பிரபல நிறுவனங்கள் ஆன இன்டெல் மற்றும் மைக்ரோசாப்ட் போன்றவற்றையும் விட்டு வைக்கவில்லை.

I  LOVE YOU 2000  :   20 ம் நூற்றாண்டு சந்தித்த மிக மோசமான வைரஸ் இது எனலாம்.   மே 4 ,  2000  தில் இந்த வைரசை Philiphines தேசத்தில் கண்டுபிடித்தார்கள்.   உலகம் முழுவதும் உள்ள இணைய உபயோகிப்பாளர்களில் கிட்டத்தட்ட 10  சதவீதம் பேர் இந்த வைரசினால் பாதிக்கபட்டார்கள்.  இது உண்டாக்கிய சேதம் சுமார் 5 . 5  பில்லியன் டாலர்ஸ் ( ரூ 27500  கோடி , அடேங்கப்பா )  என கணக்கிடப்பட்டுள்ளது.   I  LOVE YOU என்ற தகவலுடன் இந்த வைரஸ் வந்ததால் இது அதே பெயரில் அழைக்கப்பட்டது.   

இந்த வைரஸ்களை யார் தான் உருவாக்குகிறார்கள் என்றால் நிச்சயமாக கைதேர்ந்த கணினி வல்லுனர்கள் தான்.  இவர்கள் ஆக்க பூர்வமாக தங்கள் அறிவை பயன்படுத்த வேண்டும் என்பது தான் நம் அனைவரின் விருப்பமும்
 .

டிஸ்கி :   I LOVE YOU என்ற வார்த்தையை நம்பினேன் அதற்காகவா இவ்வளவு பெரிய தண்டனை என்று யாரோ முணுமுணுக்கிறார்கள் ,  மனைவியை மாத்திரம் லவ் பண்ணுங்கள் ,  ஒரு பிரச்சினையும் வராது .   ஹ.  ஹா ...

செவ்வாய், அக்டோபர் 18, 2011

கடலுக்கடியில் ஒரு உலகம் - ஒரு சுற்றுலா பார்வை


நாமெல்லாம் விடுமுறை நாட்கள் என்றால் ஏதாவது கடற்கரைக்கு செல்வோம்.  நன்கு காற்று வாங்கி விட்டு திரும்பிவிடுவோம்.   சில சுற்றுலா தளங்களில் கடலை நோக்கி அமைக்கப்பட்டிருக்கிற அறைகளை வாங்கி ,  அவைகளில் இருந்து கடலின் அழகை ரசித்திருக்கிறோம்.   ஆனால் கடலுக்குள்ளே ஒரு தாங்கும் விடுதியை அமைத்தால் எப்படி இருக்கும் என்று  நினைத்ததின் விளைவு பிஜூ கடற்கரையில் அமைக்கப்பட்ட இந்த ரிசார்ட்.  
 
 
கடல் மட்டத்தில் இருந்து 40  அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உலகத்தின் பெயர் Poseidon Undersea Resort .   மொத்தம் 24  அறைகள் இந்த நவீன கடல் உலகத்தில் உள்ளது.   ஒவ்வொரு அறையும் கடலுக்குள் இருக்கும் அழகை ரசிக்கும்படியாக கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கிறது.   ஒவ்வொரு அறையும் தனித்தனியாக பிரித்தெடுக்கும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.   
 
 
 
 
16  பேர் பயணம் செய்யும் நவீன நீர்மூழ்கி வாகனம் ஒன்றும் இந்த விடுதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.   ஒரு வாரத்திற்கு இந்த விடுதியில் தங்குவதற்கு ஒரு நபருக்கு 15000  டாலர் ( ரூ 750000  மட்டும் ) வசூலிக்கப்படுகிறது.
 
டிஸ்கி :  என்ன எல்லாமோ நடக்கிறது ...   நாங்க 7 . 5  லட்சத்தை வைத்து ஒரு வீடே கட்டிருவோமே ....  அப்படின்னு நீங்க கேட்டால் ,  நானும் உங்க கட்சிதான் .  
 
 

திங்கள், அக்டோபர் 17, 2011

CO2 வை உறிஞ்சும் செயற்கை மரங்கள் - இன்று ஒரு தகவல்


பெருகி வரும் வாகனங்களாலும் ,  தொழிற்சாலைகளாலும் பெருமளவு நச்சு புகையான CO2  வெளியாகி வருவதை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம் .  பெருகி வரும் நச்சு புகைகளினால் உலகம் வேகமாக வெப்பமயமாகி கொண்டு இருப்பதினால் பல மாற்றங்கள் இயற்கையில் உருவாகி வருவதை கண்டு கலங்கிய விஞ்ஞானிகளின் யோசனை தான் இந்த CO2 வை உறிஞ்சும் செயற்கை மரங்கள்.



அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்த்த ஆராய்ச்சியாளர்கள் 10  வருடங்களாக முயற்சி செய்து இந்த சிந்தெடிக் செயற்கை மரங்களை உண்டு பண்ணி இருக்கிறார்கள்.   இந்த மரங்கள் பஞ்சு தண்ணீரை உறிஞ்சுவது போல ,  காற்றில் உள்ள CO2 வை உறிஞ்சி அவற்றை சுத்தபடுத்தும் சக்தி கொண்டவை.   இந்த செயற்கை மரங்களின் அளவை நமக்கு தகுந்தாற்போல மாற்றி கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சம்.    ஒரு நாள் முழுவதும் கிட்டத்தட்ட 1  டன் CO2 வை  ( 20  கார்கள் வெளியேற்றும் அளவு )  உறிஞ்சும் என எதிர்பர்க்கபடுகிறது.



இந்த செயற்கை மரங்கள் தற்பொழுது Global Research Technologies ஆய்வுகூடத்தில் உருவாகி கொண்டு இருப்பதாகவும் ,  ஒரு செயற்கை மரத்தை  உண்டாக்க கிட்டத்தட்ட 30000  டாலர் (  ரூபாய் 15  லட்சம் )  செலவாகும் எனவும் ஆய்வு கூடத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் திரு. லக்நேர் தெரிவித்து உள்ளார்.

டிஸ்கி :  நல்ல திட்டம் .  வரவேற்கபட வேண்டியது .  20  கார்கள் ( டீசல் அல்லது பெட்ரோலில் ) ஓடவில்லை எனில் ஒரு மரத்தை மிச்சப்படுத்தலாம் .   என்ன செய்யலாம் தானே ..?


ஞாயிறு, அக்டோபர் 16, 2011

பிரான்சின் மிக பெரிய சூரிய ஒளி மின்சார ஆலை - இன்று ஒரு தகவல்


சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் உத்தியை உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் இந்த வேலையில் 75  சதவீத மின்சாரத்தை அணு மின் நிலையங்களில் இருந்து பெரும் பிரான்ஸ் நாடு தன்னுடைய் பெரிய சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை தெற்கு பிரான்சில் உள்ள மலை பகுதியில் அமைத்துள்ளது.
 
 
 
பரப்பளவில் 200  ஹெக்டேர் அதாவது 500  ஏக்கர் அளவில் இந்த சூரிய ஒளி பண்ணை அமைந்துள்ளது.    கிட்டத்தட்ட 90  MWe  மின்சாரம் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிற இந்த இந்த சூரிய ஒளி பண்ணையில் 113000 சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.    இந்த சூரிய ஒளி பண்ணையை அமைக்க 110  மில்லியன் யுரோ அதாவது 137 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.  
 
இந்த சூரிய ஒளிப் பண்ணைதான் பிரான்சின் மிகப் பெரிய சூரிய ஒளிப்பண்ணை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    நச்சு புகையை கட்டுபடுத்தும் இன்னும் ஒரு திட்டம் இது என்று பிரான்சின் வல்லுனர்கள் அறிவித்துள்ளனர்.
 
டிஸ்கி :   காசு கொஞ்சம் அதிகம் தான் ,  நிலமும் கொஞ்சம் ஜாஸ்தி தான் ,  ஆனால் பசுமையான இந்த மின்சாரத்தை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறோம் ...