வெள்ளி, நவம்பர் 18, 2011

விலை வாசி குறையுமா ...? வாய்ப்பிருக்கிறதா ...?


இப்பொழுது எங்கே பார்த்தாலும் , எதை எடுத்தாலும் விலை அதிகமாகி கொண்டே தான் போகிறது .   எந்த பொருளும் விலை குறைந்த மாதிரி இல்லை என புலம்பும் அநேகரில் நானும் ஒருவன் .   ஒவ்வொரு முறை விலை கூடும் போதும் , விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது என குற்றம் சொல்லுவோரும் உள்ளனர் .  உண்மையில் விலைவாசி குறையுமா ....? அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது டஜன் கேள்வி .

 ஒரு பொருளின் விலை எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் , அதன் தேவை ( Demand ) மற்றும் உற்பத்தியை ( Supply ) பொருத்தே.  ஒரு சின்ன உதாரணம் காண்போம் ..

10  பேருக்கு ஒரு நாள் அரிசி தேவை   -  10  கிலோ என்று வைத்து கொள்ளுவோம் .   ஆனால் 30  கிலோ அரிசி உற்பத்தி செய்கிறோம் என்றால் உற்பத்தியான அரிசி விற்பனை ஆகவேண்டும் ( விற்பனை ஆனால் தான் விற்றவனும் , உருவாக்கியவனும் சாப்பிடமுடியும் )  என்பதற்காக அதனுடைய விலை சற்றே குறைத்து விற்பனை செய்யப்படும் . 

ஆனால் அதே நேரத்தில் உற்பத்தி 5 கிலோ தான் என்று வைத்துக்கொள்ளுங்கள் .  அதனுடைய தேவை அதிகரிப்பதாலும் ,  உற்பத்தி குறைந்து இருப்பதினாலும் விலை அதிகமாகி விடும் . 


 இது ஒரு சின்ன உதாரணம் தான் .  மிக முக்கியமாக தேவை அதிகரிக்கிறது ஆனால் உற்பத்தி குறைகிறது .   இது தான் சாராம்சம் ...  சரி .. இதற்க்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போமே ..!

 மக்கள் தொகை பெருக்கம் :   


 இது ஒரு முக்கியமான காரணம் .   ஒவ்வொரு ஆண்டிலும் மக்கள் தொகை இந்தியாவில் பெருகி வருகிறது .  தற்பொழுது 121  கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை வெகு விரைவில் சீனாவை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .  ஒவ்வொரு குழந்தை பிறக்க பிறக்க தேவை அதிகமாகிறது என்று அர்த்தம் .  அதனால் தான் குழந்தை கட்டுப்பாட்டு முறைகள் அரசால் மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டு வருகிறது .  ஆனால் வழக்கம் போல நாம் அதை கண்டுகொள்வதில்லை என்பது வேறு விஷயம் .... 

 விவசாயத்தின் தேக்கம்  :  


நாட்டின் பல இடங்களில் விவசாயம் அழிந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் .  ஏன் எனில் விவசாயத்தினால் கிடைக்கும் வருமானம் போதாத காரணத்தினால் வேறு வேலைகளை தேடி விவசாயிகள் பயணமாகிறார்கள் .   அதனால் தான் அரசும் இயன்ற வரையில் இலவச மின்சாரம் , உர மானியம் என்றெல்லாம் பல கொடுக்கிறது .  காரணம் அப்படியாவது விவசாயம் அழியாமல் இருந்தால் உற்பத்தி பெருகுமே ...


ரியல் எஸ்டேட் மோகம்  :


தற்பொழுது நாட்டை பிடித்திருக்கும் மிகப் பெரிய பகைமை இது தான் .   வீடு கட்ட இடம் என்ற நிலை போய் ,  நிலம் வாங்கி விற்பது ஒரு தொழிலாய் மாறின பிறகு , என்னமோ அழிவது எல்லாம் விளை நிலங்கள் தான் .   அதில் தான் நல்ல தண்ணீர் , பசுமை இருப்பதால் விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன.  மறைமுகமாக உற்பத்தி அழிக்கப்படுகின்றன ...  


 சர்வதேச சந்தையில் எரிபொருளின் ஏற்ற / இறக்கங்கள் :
நமது எரிபொருள் தேவை சர்வதேச சந்தையை நம்பி இருக்கிற படியால் , எரிபொருள் விலை உயருகிற பொழுது , அதனோடு கூட சேர்ந்து அது சம்பந்தப்பட்ட விலையும் உயர்கிறது . 

நாம் என்ன செய்யலாம்  :-
  1. கூடுமானவரை ..... நாம் இருவர் ...நமக்கு ஒருவர் .....! சரி பரவாயில்லை நமக்கு இருவர் ....
  2. விவசாய நிலம் இருக்குமானால் தலையே போனாலும் விற்பனை செய்ய வேண்டாமே ... ஏதாவது விவசாயம் நடக்கட்டும் .
  3. ரியல் எஸ்டேட் தொழிலை ஆதரிக்கும் வகையில் அதிக நிலங்கள் வேண்டாமே ...
 டிஸ்கி :  இன்னும் சில வருடங்களில் விலை பட்டியல் ...
ஒரு லிட்டர் பெட்ரோல்         -    250  ருபாய் .
ஒரு கிலோ அரிசி                    -      100  ருபாய்
ஒரு கிலோ உப்பு                     -        50   ருபாய்  ( இது கூடவா ..!)


செவ்வாய், நவம்பர் 15, 2011

டெங்கு... டெங்கு .... கவனம் ...கவனம்


டெங்கு என்ற பெயரை கேள்விப்படாதவர் யாரும் இருக்க முடியாது என்பது எனது எண்ணம் .   மிக மோசமான இந்த காய்ச்சல் மனித உயிர்களை அள்ளி செல்லும் வல்லமை படைத்தது .  இப்பொழுதும் ஆங்காங்கு டெங்கு அறிகுறி தோன்றுவதால் , இந்த டெங்கு காய்ச்சல் குறித்து சில காரியங்களை நாம் காணலாம் .


டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் குடும்பத்தினால் பரவுகிற காய்ச்சல் .  இந்த வைரஸ்கள் கொசுக்களின் மூலமாக பரவுகின்றன ..

 டெங்குவின் அறிகுறிகள்  :

  1. தலை வலி
  2. காய்ச்சல்
  3. முழு சோர்வு
  4. மூட்டுகளில் மற்றும் தசைகளில்  கடுமையான வலி
  5. சுரப்பிகளில் வீக்கம்
  6. குமட்டல் மற்றும் வாந்தி

 டெங்கு காய்ச்சலுக்கு எந்த மருந்தும் கிடையாது என்பது தான் உண்மை .   ஆனால் டெங்கு காய்ச்சலின் மூலம் வருகிற அறிகுறிகளான வியாதிகளுக்கு தான் மருந்துகள் தரப்படுகிறது.


கடுமையான வயிற்று போக்கு டெங்கு காய்ச்சலின் உச்சம் .  

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது நமது கரங்களில் தான் இருக்கிறது .  அண்ணன் கொசு நமது வீட்டிற்குள் நுழையக்கூடாது . அவ்வளவு தான் .... அதற்க்கு சில காரியங்களை செய்யலாமே ....

  1. தேங்கி நிற்கும் தண்ணீரை சுத்தம் செய்தல்
  2. குப்பைகளுக்கு குட்பை சொல்லுதல்
  3. வீட்டினுள் துணி மணிகளை மடித்து பெட்டிகளில் வைத்தல்
  4. தூங்கும் போது கொசு வலைகளை பயன்படுத்தல் ..

 டெங்கு ஒரு உயிர்க்கொல்லி தான் ... ஆனால் பாதுகாப்பாயிருந்தால் சுகமான வாழ்வு நிச்சயம் உண்டு

டிஸ்கி :  டெங்குக்கு அடிப்போம் சாவு மணி ......! 


திங்கள், நவம்பர் 14, 2011

குடி மகன்கள் கொஞ்சம் கவனிக்க ....



நாளுக்கு நாள் குடிமகன்களின்  ( Citizen ) எண்ணிக்கை கூடி வருகிறது போல குடி மகன்களின் ( Drunkards )  எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது .  சிறு வயதினர் ஏதோ  ஜாலிக்காக ஆரம்பிக்க போய் , இப்பொழுது துக்கம் , சந்தோசம் எல்லாவற்றிலும் குடி முக்கியத்துவம் பெறுகிறது .   குடி குடியை கெடுக்கும் என்பது நமக்கு நன்கு தெரிந்தது தான் ஆனால் குடி உங்களையே அழிக்கும் என்பதை நாம் கொஞ்சம் பார்க்கலாம் .
 
 
 
 குடி மகன்களின் / குடி மகள்களின் மூளை பாதிக்கப்படுமாம் .  இதனால் மன நிலை பாதிக்கப்படுவதுடன் ,  நியாபக சக்தியும் குறையுமாம் .   65  சதவீத தற்கொலைகள் அதிகப்படியான குடியினால் நிகழ்வதாகவும் ,   மூன்றில் ஒரு பங்கு இல வயதினர் குடியினால் தங்களை அளித்து கொள்வதாகவும் ஒரு ஆய்வு சொல்லுகிறது .

அதிகபடியாக குடிக்கும் குடிமகன்களுக்கு இலவச இணைப்பாக வாய் மற்றும் தொண்டையில் கேன்சர் வருவதற்கு வாய்ப்புள்ளது .  பெண்களுக்கு மார்பக புற்று நோய்கள் தாக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது .

குடிமகன்கள் குடியினால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு வந்து உடனடியாக சொர்க்கத்திற்கு போகும் வாய்ப்பும் உள்ளது .

அதிகப்படியாக குடித்தால் நுரையீரல் பாதிக்கப்படும் .   குடித்த பின் வாந்தி எடுத்தால் , அந்த வாந்தி நுரை ஈரலில் சிக்கி அபாய நிலைக்கும் கொண்டு போகும் .

வயிற்று பகுதியில் அல்சர் உருவாகி அங்கும் கேன்சர் உருவாகும் வாய்ப்பு உள்ளது 
 
மேலும் கிட்னி , எலும்புகள் , தோல்  எல்லாவற்றியும் பாதிக்குமாம்  
 
அட ...! இவ்வளவு விடயங்களா என்று நாம் யோசித்து கொண்டு இருக்கும் போதே ,  எத்தனயோ குடிமகன்கள் சாராய கடையின் வாசலில் தவம் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மனம் வலிக்க தான் செய்கிறது .
டிஸ்கி :  ஆமாம் இவ்வளவு விஷயம் இருக்கிறதே , பின் ஏன் அரசாங்கமே மதுவை விற்க வேண்டும் என்ற கேள்வியை நானே பல முறை கேட்டிருக்கிறேன் .  குடி குடியை கெடுக்கும் என்று பாட்டிலின் மேல் எழுதினாலும் குடி நாட்டிற்க்கும் வீட்டிற்கும் கேடு என்று வாசித்தாலும் கொஞ்சம் கூட அசராமல் தண்ணி அடித்து விட்டு அலப்பறை விடும் சகோ. களை பார்க்கும் போதும் ஒரு கேள்வி மாத்திரம் கேட்க தோன்றுகிறது ..."  நண்பா ....சாவதற்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாயே ..., ஒரு நாளாவது நீ வாழ்வதற்கு ரிஸ்க் எடுத்தது உண்டா ...?"